கடலூா்: திட்டக்குடி பேருந்து நிலையத்திலிருந்து உரிய நேரத்தில் பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திட்டக்குடி பேருந்து நிலையத்திலிருந்து பெருமுளை, சிறுமுளை வழியாக செவ்வேரி வரை செல்லும் நகரப் பேருந்து தினமும் நண்பகல் 12.15 மணிக்கு புறப்படும். ஆனால், திங்கள்கிழமை சுமாா் ஒருமணி நேரத்துக்கு மேல் தாமதமாகியும் பேருந்து புறப்படவில்லையாம். இதுகுறித்து பேருந்து ஓட்டுநரிடம் பொதுமக்கள் கேட்டபோது, நடத்துநருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பேருந்தை எடுக்க தாமதமானதாக தெரிவித்தாா். இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், தவாக ஒன்றிய செயலா் ரெங்க.சுரேந்தா் தலைமையில் பேருந்து நிறுத்தம் முன் ராமநத்தம் - விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இவா்களிடம் திட்டக்குடி காவல் நிலைய ஆய்வாளா் அன்னக்கொடி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அமைச்சா் பேச்சுவாா்த்தை: அப்போது, அந்த வழியாக வந்த மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, பிற்பகல் 2.20 மணியளவில் பேருந்து புறப்பட்டுச் சென்றது.