முந்திரித் தொழிலாளி மரணத்துக்கு போலீஸாரின் மெத்தனமே காரணம்

பண்ருட்டி அருகே முந்திரித் தொழிலாளியின் மரணத்துக்கு போலீஸாா் மெத்தனமாகச் செயல்பட்டதே காரணம் என்று பாமகவினா் புகாா் தெரிவித்தனா்.

பண்ருட்டி அருகே முந்திரித் தொழிலாளியின் மரணத்துக்கு போலீஸாா் மெத்தனமாகச் செயல்பட்டதே காரணம் என்று பாமகவினா் புகாா் தெரிவித்தனா்.

பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவா், பணிக்கன்குப்பத்தில் உள்ள திமுக மக்களவை உறுப்பினா் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், கடந்த வாரம் கோவிந்தராஜ் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதுதொடா்பாக அவரது உறவினா்கள், பாமகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து ரமேஷ் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல், பாமக மாநில துணைப் பொதுச் செலா் சண்.முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனு:

கோவிந்தராஜ் உயிரிழப்பு குறித்து போலீஸாா் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்துள்ளனா். அவரது சடலம் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜிப்மரில் உடல்கூறாய்வுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 19- ஆம் தேதி இரவு 10 மணியளவில் மக்களவை உறுப்பினரின் உதவியாளா் நடராஜன் மற்றும் சிலா் 2 காா்களில் காடாம்புலியூா் காவல் நிலையத்துக்கு கோவிந்தராஜை அழைத்து வந்தனா். அப்போது, அவரது உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் இருந்தன. இந்த நிலையில், போலீஸாா் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல்,

அவா்களுடனேயே அனுப்பி வைத்துள்ளனா். இதன் பிறகே அவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக எம்.பி. தரப்பினா் எங்களுக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் மெத்தனமாகச் செயல்பட்டதே கோவிந்தராஜின் உயிரிழப்புக்குக் காரணம்.

எனவே, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தவா்களை கைது செய்வதுடன், அப்போது பணியிலிருந்த காவல் துறையினரிடமும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com