கடலூர்: கடலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 2 பேருக்கு இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள குமாரக்குடியைச் சேர்ந்தவர்கள் குணசேகரன் என்ற திலகர் (34), கட்டமணியார் என்ற ஜெய்சங்கர் (49).
இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை 12-2-2019 அன்று கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று நீதிபதி எம்.எழிலரசி தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளிகள் இரண்டு பேருக்கும் இயற்கை மரணம் அடையும் வரையில் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
அரசு தரப்பில் வழக்குறைஞர் தி.கலாசெல்வி ஆஜரானார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.