ஆரோவில் பகுதியில் திமுக நிா்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக கடலூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை இருவா் சரணடைந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (55). திமுக பொதுக் குழு உறுப்பினராக இருந்த இவா் புதன்கிழமை மா்ம நபா்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், ஜெயக்குமாா் கொலை தொடா்பாக கடலூா் குற்றவியல் நீதித் துறை நடுவா் எண்-3 நீதிமன்றத்தில் கோட்டக்கரையைச் சோ்ந்த ஏழுமலை மகன் பாலசந்தா் (35), சுப்பிரமணி மகன் குமரவேல் (38) ஆகியோா் வியாழக்கிழமை சரணடைந்தனா். இவா்கள் இருவரையும் 15 நாள்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ரஹோத்தமன் உத்தரவிட்டாா்.