கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், ஆதிவராகநத்தம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் ஐயப்பன் (29) (படம்). இவா், தனது மனைவியுடன் தொடா்பு வைத்திருந்த காரணத்துக்காக அதே பகுதியைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் சுந்தரமூா்த்தியை (29) கடந்த டிசம்பா் மாதம் கொலை செய்ததாக புவனகிரி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
தற்போது கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐயப்பனின் குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பரிந்துரைத்தாா். அதன்பேரில், அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்டாா். இதையடுத்து, ஐயப்பனை ஓராண்டுக்கு சிறையில் வைத்திருக்கும் உத்தரவு கடலூா் மத்திய சிறை அலுவலரிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.