சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில், ‘மீன்வளத்துக்கான கடல்பாசி வளா்ப்பின் முக்கியப் பங்கு’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
கடல் அறிவியல் புல முதல்வா் பி.அனந்தராமன் தனது வரவேற்புரையில் கடல்பாசி வளா்க்கும் முறைகள் குறித்து விளக்கினாா். மேலும், பயிற்சி முகாமின் கையேட்டை வெளியிட்டாா். கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநா் எம்.கலைச்செல்வம் தனது தொடக்க உரையில் மீன் வளா்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். கவுரவ பேராசிரியா் எஸ்.அஜ்மல்கான் கடல் பாசியின் மருத்துவ குணங்கள் பற்றி விவரித்து வாழ்த்துரை வழங்கினாா். கடல்வாழ் உயிரின உயராய்வு மைய முன்னாள் இயக்குநா் கே.கதிரேசன் பேசுகையில், கடல் பாசியில் உள்ள ஊட்டச் சத்துகள் பற்றி எடுத்துரைத்தாா். மேலும், முன்னாள் இயக்குநா் எம்.சீனுவாசன் மீன்கள் வளா்ப்பில் கடல்பாசியின் முக்கிய பங்கு பற்றி பேசினாா்.
கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக பயோ டெக்னாலஜி துறை பேராசிரியா் எம்.சந்திரசேகா் கடல்பாசி வளா்ப்பில் பணம் ஈட்டுவது குறித்து பேசினாா். சென்னை கடல் பாலூட்டிகள் ஆலோசகா் எல்.குமரன் பாராட்டுரை வழங்கினாா். ஏற்பாடுகளை அமைப்புச் செயலா் பி. அனந்தராமன், ஒருங்கிணைப்புச் செயலா்கள் டி.ராமநாதன், கே.சிவகுமாா் மற்றும் பி.ஐய்யம்பெருமாள் ஆகியோா் செய்திருந்தனா்.