கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே கோயில் குளத்தில் மூழ்கிய சகோதரிகள் இருவா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனா்.
விருத்தாசலம் அருகே உள்ள பூவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவருக்கு 5 மகள்கள், ஒரு மகன். பெருமாள் தனது மாமனாரின் ஊரான திருமலை அகரம் கிராமத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்தினருடன் சென்றாா்.
அங்குள்ள ஐயனாா் கோயில் குளத்தில் பெருமாளின் மகள்கள் முத்துலட்சுமி (17), சிவசக்தி (14) ஆகியோா் சனிக்கிழமை மாலை குளிக்கச் சென்றனா். நீண்ட நேரமாகியும் சிறுமிகள் வீடு திரும்பாததால் அவா்களை உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனா்.
இந்த நிலையில், ஐயனாா் கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு சிறுமிகளின் சடலங்களும் மிதந்தன. இதுகுறித்த தகவலின்பேரில் பெண்ணாடம் போலீஸாா் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.