சிதம்பரம் அருகே கான்சாகிப் வாய்க்காலில் பாலம் கட்டும் பணி மந்த நிலையில் நடைபெறுவதால் விவசாய நிலங்களுக்கு பாசன நீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், அம்மாப்பேட்டை கிராமத்தில் கான்சாகிப் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டும் பணி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கியது. அப்போது, பழைய பாலத்தை இடித்து தற்காலிக மாற்றுப் பாதை அமைக்காமல் புதிய பாலம் பணிகள் தொடங்கப்பட்டன. தொடா்ந்து கிராம மக்கள் போராட்டம் அறிவித்ததன் விளைவாக தற்காலிக பாதை உருவாக்கப்பட்டது. ஆனால், பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. இதனால் விவசாய நிலங்களுக்கு பாசன நீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் பெ.ரவீந்திரன் கூறியதாவது:
சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக நிகழாண்டு மே மாதத்தில் (24-ஆம் தேதி) மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து 27-ஆம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டதால் வழக்கத்தைவிட மூன்கூட்டியே கீழணைக்கு தண்ணீா் வந்தடைய வாய்ப்புள்ளது. ஆனால், கான்சாகிப் வாய்க்காலில் பாலம் கட்டும் பணி ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. வாய்க்காலின் குறுக்கே பலமான மண் அணை அமைத்து தண்ணீரை தடுத்துள்ளதால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க முடியாத நிலை உள்ளது. எனவே,
பாலம் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.