சிதம்பரம்: பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று (ஜூன் 27-ம் தேதி) திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நடராஜர் கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் க.ந.கனகசபாபதி தீட்சிதர் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது.
உற்சவ விபரம் வருமாறு: ஜூன் 28-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 29-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, 30-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, ஜூலை 1-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா (தெருவடைச்சான்), ஜூலை 2-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, ஜூலை 3-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, ஜூலை 4-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.
ஜூலை 5-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை 6-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜூலை.7-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர், துணை செயலாளர் கே.சேது அப்பா செல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் க.ந.கனகசபாபதி தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.