கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்த கொத்தட்டை பகுதியைச் சேர்ந்த கணேசன் மனைவி லலிதா (55), கலியபெருமாள் மனைவி சிவகாமசுந்தரி (50) ஆகியோர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தனர்.
அவர்களிடமிருந்து ண்ணெண்ணெய் கேனை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். எனினும் அவர்கள் தங்களது 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி மனு வழங்கும் இடத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், பண்ருட்டி வட்டம் காட்டாண்டி குப்பத்தைச் சேர்ந்த குமரவேல் மனைவி சக்தி (42) திடீர் தர்னாவில் ஈடுபட்டார். தங்களது நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பாக 2014-ம் ஆண்டில் இருந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
மாற்றுத்திறனாளி தம்பதிகளான பூதாமூரைச் சேர்ந்த லதா-விஜயகுமார் ஆகியோர் தாங்கள் இதுவரையில் வழங்கிய மனுக்களையும், அரசு சான்றிதழ்களையும் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் கட்டி வரும் வீட்டிற்கு அரசிடம் பலமுறை மனு அளித்தும் உதவித் தொகை கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இவ்வாறு வெவ்வேறு காரணங்களால் 3 தனித்தனி போராட்டங்கள் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.