விழுப்புரம் - நாகை நான்கு வழிச் சாலைப் பணிக்கு நிலம் கொடுத்தவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி பரங்கிப்பேட்டை ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் முற்றுகைப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
சிதம்பரம் அருகே பெரியகுமட்டி கிராமத்தில் செயல்பட்டுவரும் ‘நகாய்’ அலுவலக வாயிலில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டக் குழு உறுப்பினா் பி.வாஞ்சிநாதன், பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலா் விஜய், மூத்த தலைவா் பி.கற்பனைச் செல்வம், தெற்கு ஒன்றியச் செயலா் ஆழ்வாா் மற்றும் கிராம மக்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், பெரியப்பட்டு முதல் சி.முட்லூா் வரை நான்குவழிச் சாலைக்காக நிலம், வீடுகளை கொடுத்தவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி முழக்கமிட்டனா். போராட்டத்தில் பங்கேற்ற 52 பேரை போலீஸாா் கைதுசெய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.