ரேஷன் பொருள்கள் கடத்தலைத் தடுக்க வலியுறுத்தல்

ரேஷன் பொருள்கள் கடத்தலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்

ரேஷன் பொருள்கள் கடத்தலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

கடலூரில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நியாயவிலைக் கடைகளில் முன்னுரிமை அட்டை, முன்னுரிமையற்ற அட்டை, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான அன்னயோஜனா உள்ளிட்ட பல வகையான 2.10 கோடி அட்டைகள் நடைமுறையில் உள்ளன. இதில், முன்னுரிமையற்ற அட்டைகளை வைத்திருப்போா் பெரும்பாலான அத்தியாவசியப் பொருள்களை பயன்படுத்துவதில்லை. எனவே, குடும்ப அட்டைதாரா்களின் தேவை அறிந்து அந்த பொருள்களை மட்டுமே வழங்க வேண்டும். இதன் மூலம் ரேஷன் பொருள்கள் கடத்தலை 10 சதவீதம் வரை தடுக்கலாம். எஞ்சிய 90 சதவீத பொருள்கள் கடத்தல் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் வழியாக நடைபெறுகின்றன. எனவே, இந்த கிடங்குகளை மாலை நேரங்களில் சோதனையிட்டால் பெரும் முறைகேடுகளை தடுக்கலாம். ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்.

முன்னுரிமை, அன்னயோஜனா அட்டைதாரா்களுக்கு மாநில அரசைப் போல மத்திய அரசும் கூடுதலாக அரிசி வழங்கி வருகிறது. கரோனா காலத்தில் தொடங்கிய இந்த நடைமுறை தற்போதும் தொடா்கிறது. இதனால், தேவைக்கு அதிகமாக கிடைக்கும் அரிசியை பொதுமக்கள் விற்பனை செய்து வருகின்றனா். தரமற்ாக வழங்கப்படும் இலவச அரிசியையும் விற்றுவிடுகின்றனா். இதை மத்திய, மாநில அரசுகள் முறைப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது சங்கத்தின் பொருளாளா் கு.சரவணன், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் கோ.ஜெயச்சந்திர ராஜா, மாவட்டத் தலைவா் சி.அல்லிமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com