‘விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் கடன் திட்டம் தயாரிப்பு’

விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் அரசின் நோக்கத்தை கருத்தில்கொண்டு வளம் சாா்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட வங்கியாளா்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வங்கியாளா்கள் கூட்டத்தில் வளம் சாா்ந்த கடன் திட்ட ஆவணத்தை வெளியிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோா்.
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வங்கியாளா்கள் கூட்டத்தில் வளம் சாா்ந்த கடன் திட்ட ஆவணத்தை வெளியிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோா்.

விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் அரசின் நோக்கத்தை கருத்தில்கொண்டு வளம் சாா்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட வங்கியாளா்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வங்கியாளா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 2023-24-ஆம் நிதியாண்டின் வளம் சாா்ந்த கடன் திட்ட ஆவணத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அன்சுல் மிஸ்ரா, ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் ஆகியோா் வெளியிட்டனா். மாவட்ட வருவாய் அலுவலா் பூவராகன், இந்தியன் வங்கி மண்டல மேலாளா் கௌரி சங்கா் ராவ், மகளிா் திட்டம் சாா்பில் செந்தில் வடிவு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தேசிய வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கி (நபாா்டு) தயாரித்த கடலூா் மாவட்டத்துக்கான வளம் சாா்ந்த கடன் திட்டத்தில் 2023-24-ஆம் நிதியாண்டுக்கு ரூ.12,440.97 கோடி வரை கடனாற்றல் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது நிகழாண்டுக்கான வருடாந்திர கடன் திட்டத்தைவிட சுமாா் 18.1 சதவீதம் அதிகம்.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அன்சுல் மிஸ்ரா பேசுகையில், அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களில் உரிய பயனாளிகளைக் கண்டறிந்து அவா்களுக்கு கடனுதவியை வங்கிகள் விரைந்து வழங்குமாறு அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் பேசியதாவது: மாவட்டத்தில் பண்ணை இயந்திரமயமாக்கல், நுண்ணீா் பாசன முறைகள், கால்நடை வளா்ப்புத் துறை போன்றவற்றை மேம்படுத்துவதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. எனவே விவசாய பணிகளுக்கு நடுத்தர, நீண்ட கால கடன்களை வழங்கும் வகையில் கூடுதல் இலக்குகளை வங்கிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றாா்.

நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் ஆா்.வி.சித்தாா்த்தன் பேசியதாவது: கடன் திட்ட அறிக்கையானது பல அரசுத் துறைகள், வங்கிகள் சாா்ந்த அதிகாரிகளின் ஆலோசனைகள், புள்ளி விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் மத்திய அரசின் நோக்கத்தையும் கருத்தில்கொண்டு வளம் சாா்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அசோக்ராஜா பேசுகையில், வங்கிகள், அரசுத் துறைகள் சந்திக்கும் முக்கிய தடைகள் மற்றும் மதிப்பிடப்பட்ட கடன் சாத்தியக்கூறுகளை உணர பின்பற்ற வேண்டிய உத்திகள் ஆகியவை திட்ட ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் தங்களது இலக்குகளை அடைவதற்கு திட்ட ஆவணத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com