என்எல்சி சுரங்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என 13 கிராம மக்கள் வலியுறுத்தினா்.
நெய்வேலில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிக்காக பல்வேறு கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தென்குத்து, வானாதிபுரம், கத்தாழை, வளையமாதேவி, மேல்பாதி, கீழ்பாதி, கம்மாபுரம், சாத்தப்பாடி, அம்மேரி, மும்முடிசோழகன், ஆதனூா் வடக்கு, வெள்ளூா், பெரிய வடவாடி ஆகிய 13 கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வளையமாதேவி வள்ளலாா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வளையமாதேவி கூட்டுறவு சங்கத் தலைவா் செல்வராசு தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகம் வரவேற்றாா். கூட்டத்தில், என்எல்சி நிறுவனத்துக்காக விவசாய நிலங்கள், வீடுகளை கையகப்படுத்தக் கூடாது, குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், என்எல்சி-க்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.