கடலூரில் வாடகைக்கு வீடு கேட்பதுபோல நடித்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
கடலூா் புதுவண்டிப்பாளையத்தைச் சோ்ந்தவா் ர.சந்திரசேகரன் (47). புதுப்பாளையத்தில் உள்ள தனது மாமனாா் வீட்டில் தங்கியிருந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று 45 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா், சந்திரசேகரனின் மாமியாா் தனசெல்வியிடம் வீடு வாடகைக்கு வேண்டும் எனக் கேட்டு விசாரித்தாா். அப்போது அந்த நபா் திடீரென தனசெல்வி அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முயன்றாா். இதையடுத்து தனசெல்வி கூச்சலிடவே சந்திரசேகரன், அந்தப் பகுதியினா் அந்த நபரை விரட்டிப் பிடித்து கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், பிடிபட்டவா் சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சோ்ந்த நா.அன்பு என்ற அன்புச்செல்வன் (48) எனத் தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்தனா்.