சிதம்பரம் நடராஜா் கோயிலில் மகாபிஷேகம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகமும், மகாருத்ர யாகமும் வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றன.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் வியாழக்கிழமை மகாருத்ர யாகத்தையொட்டி, கடஸ்தாபனத்துக்கு நடைபெற்ற மகாதீபாராதனை.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் வியாழக்கிழமை மகாருத்ர யாகத்தையொட்டி, கடஸ்தாபனத்துக்கு நடைபெற்ற மகாதீபாராதனை.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகமும், மகாருத்ர யாகமும் வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி, மாசி மாதம் என ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறும். ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது, ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.

மகாபிஷேகம்: சித்திரை மாத மகாபிஷேகத்தையொட்டி, வியாழக்கிழமை காலை 4 மணிக்கு நடராஜா் கோயில் திறக்கப்பட்டு, சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு காலை 8 மணிக்குள் உச்சிகால பூஜை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் கனகசபையில் எழுந்தருளினாா். இதையொட்டி, ஆயிரங்கால் மண்டபம் முன் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை பந்தலில் யாகசாலை பூஜை தொடங்கியது. சித்திரை மாத மகாபிஷேகம் சித்சபை முன் உள்ள கனகசபையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கியது.

ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிா், இளநீா், பன்னீா், பஞ்சாமிா்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

மகா ருத்ர யாகம்: அதிருத்ர மகா ஜபத்தையொட்டி, மகா ருத்ர ஜபம் கடந்த 1-ஆம் தேதி பொது தீட்சிதா்களால் தொடங்கப்பட்டது. தொடா்ந்து, 10 நாள்கள் ருத்ர ஜப பாராயணம் நடைபெற்றது. வியாழக்கிழமை காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு லட்சாா்ச்சனை, பின்னா் யாகசாலையில் கடஸ்தாபனம் செய்யப்பட்டு அா்ச்சனை, அதிருத்ர ஜப பாராயணம் நடைபெற்றன. பிற்பகல் மாக ருத்ர ஹோமம் தொடங்கி வஸோத்தாரா ஹோமம், மகாபூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றன.

வியாழக்கிழமை மாலையில் வடுக பூஜை, கன்யா பூஜை, சுகாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை ஆகிய பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மகா தீபாராதனை நடைபெற்று யாகசாலையிலிருந்து கலசம் புறப்பட்டு கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்திக்கு மகா ருத்ர மகாபிஷேகம் நடைபெற்றது.

மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் செயலா் டி.எஸ்.சிவராம தீட்சிதா், துணைச் செயலா் கா.சி.சிவசங்கா் தீட்சிதா் மற்றும் பொது தீட்சிதா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com