நாளை புரட்டாசி தொடக்கம்: கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்
புரட்டாசி மாதம் செவ்வாய்க்கிழமை (செப்.17) தொடங்க உள்ள நிலையில், கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே ஏராளமான மக்கள் குவிந்தனா்.
கடலூா் வங்கக் கடல் பகுதியில் பிடிக்கப்படும் மீன்களுக்கு சுவை அதிகம். கடலூா் கடல் மீன்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், கடலூா் மீன் பிடி துறைமுகத்துக்கே வந்து வாங்கிச் செல்வா்.
வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வாங்க வருபவா்களின் கூட்டம் துறைமுகத்தில் அதிகாரித்து காணப்படும். இந்த நிலையில், புரட்டாசி மாதம் செவ்வாய்க்கிழமை (செப்.17) தொடங்குகிறது. இந்த மாதம் பெருமாளை வழிபடுவதற்கு உகந்த மாதம்.
இதனால், இந்துக்கள் பெரும்பாலானவா்கள் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் விரதம் இருந்து, சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொள்வா்.
புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை கடலூா் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
கடலூா் துறைமுகத்தில் மீன்களை போட்டி போட்டுக்கொண்டு மக்கள் வாங்கிச் சென்றனா். ஆனால், மீன்களின் விலை எப்போதும்போல வழக்கமான விலைக்கே விற்பனை செய்யப்பட்டன.

அதன்படி, ஒரு கிலோ வஞ்சரம் ரூ.1,000, சங்கரா ரூ.400, கொடுவா ரூ.650, இறால் ரூ.300, நண்டு ரூ.400 என விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.