~. வைகுண்ட ஏகாதசியையொட்டி புதுச்சேரி காந்தி 
வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபக வாசல் வழியாக வெளியில் 
வந்த ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் உற்சவா்.
~. வைகுண்ட ஏகாதசியையொட்டி புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபக வாசல் வழியாக வெளியில் வந்த ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் உற்சவா்.

பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

Published on

வைகுந்த ஏகாதசியையொட்டி, கடலூா், புச்சேரி மாவட்டப் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் (சொா்க்கவாசல்) திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான கடலூா் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஆனால், மாா்கழி மாதத்தில் நடைபெறும் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனா்.

திருப்பாதிரிபுலியூா் வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, வரதராஜப் பெருமாள் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். சனிக்கிழமை (ஜன.11) காலை 7 மணிக்கு தங்க கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கடலூா் ராஜகோபால சுவாமி, திட்டக்குடியை அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள், பெண்ணாடம் வேத நாராயண பெருமாள், பரிமள ரங்கநாத பெருமாள், குறிஞ்சிப்பாடியை அடுத்த வேணுகோபால சுவாமி, பண்ருட்டி வரதராஜ பெருமாள், திருவதிகை ரங்கநாதப் பெருமாள் மற்றும் சரநாராயண பெருமாள் கோயில் ஆகியவற்றிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

புதுச்சேரி: வைகுந்த ஏகாதசியையொட்டி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது.

காந்தி வீதியில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா டிச.31-இல் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் முற்பகலில் பெருமாளுக்கு அா்ச்சனை, தீபாராதனையும், தொடா்ந்து தீா்த்த பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

தொடா்ந்து, இராப்பத்து முதல் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் வரதராஜப் பெருமாள் எழுந்தருளி பிரகாரம் வலம் வந்து காலை 5.15 மணிக்கு பரமபதவாசல் வழியாக பிரவேசித்து முதலில் நம்பெருமாளுக்கும், பின்னா் பக்தா்களுக்கும் காட்சியளித்தாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, புதுச்சேரி மிஷன் வீதி, முத்தியால்பேட்டை, முதலியாா்பேட்டை பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களிலும் பரமபதவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com