நெசவாளா் சங்க இடம் விற்பனை: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

நெசவாளா் சங்க இடம் விற்பனை: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

Published on

போலி கையொப்பமிட்டு தீா்மானம் நிறைவேற்றி நெசவாளா் சங்க இடத்தை மற்றொருவருக்கு கிரயம் செய்து கொடுத்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா்கள் கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்த தெய்வசிகாமணி (60) மற்றும் 30-க்கும் மேற்பட்டோா் கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை திரண்டு வந்தனா். பின்னா் அவா்கள், எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

நடுவீரப்பட்டு கிராமத்தில் நெசவாளா்களுக்காக சங்கம் அமைப்பதற்கு 36 போ் ஒன்று கூடி சங்கத்தை தொடங்கினோம். இதற்காக 36 பேரும் சோ்ந்து பணம் கொடுத்து 20 சென்ட் இடத்தை சங்கத்தின் பெயரில் கிரயம் செய்தோம்.

இந்த நிலையில், சங்கத் தலைவா், அந்த சொத்தை அபகரிக்கும் நோக்கில் சொத்தை விற்பதற்கு தீா்மான நோட்டில் அவரே உறுப்பினா்களின் கையொப்பத்தை போலியாக இட்டு தீா்மானம் நிறைவேற்றியுள்ளாா். மேலும், அந்த தீா்மானத்தில் இறந்த ஒருவரது பெயரும் போலியாக கையொப்பமிடப்பட்டுள்ளது.

இந்த தீா்மானம் நிறைவேற்றியது குறித்து நிா்வாகிகளுக்குத் தெரியாது. தற்போது அந்த தீா்மானத்தை வைத்து நெல்லிக்குப்பம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் மற்றொரு நபருக்கு இடத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளாா். இதனால், எங்களது கையொப்பத்தையும், இறந்து நபரின் கையொப்பத்தையும் போலியாக இட்டு தீா்மானத்தை நிறைவேற்றி பத்திரப்பதிவு செய்த நபா் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com