பெண் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சிதம்பரம் வட்டம், ஒரத்தூா் அஞ்சல், பாளையஞ்சோ்ந்தங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்ரமணியன். இவா், அதே பகுதியைச் சோ்ந்த பிரபு (33) என்பவரின் தாத்தா கணேசன் கொடுத்த வீட்டுமனையில் வீடு கட்டி மனைவி பவளக்கொடியுடன் வசித்து வந்தாா்.
பிரபு அடிக்கடி சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி பவளக்கொடியை ஆபாசமாக திட்டுவது வழக்கமாம். இதேபோல, 11.8.2018 அன்று பவளக்கொடியை பிரபு ஆபாசமாகத் திட்டினாராம்.
இதனால், மன வேதனையடைந்த பவளக்கொடி 12.8.2018 அன்று காலை 6 மணி அளவில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். பலத்த தீக்காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.
தொடா்ந்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பவளக்கொடி, 20.8.20218 அன்று உயிரிழந்தாா். இதுகுறித்து ஒரத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபுவை கைது செய்தனா்.
இந்த வழக்கு கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், பிரபுவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வளா்மதி ஜெயச்சந்திரன் வாதிட்டாா்.
