முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசு சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்: தி.வேல்முருகன்

Published on

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழா்களின் உரிமையை பறிக்கும் அபாயம் உள்ளதால், தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீா் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணை பலவீனமாக உள்ளது என்றும், அணையை இடித்துவிட்டு மாற்று இடத்தில் அணையை கட்ட வேண்டும் என்றும் கேரள கம்யூனிஸ்ட் அரசு மற்றும் அம்மாநில பொதுநல அமைப்புகள் அணையை இடிக்க தீவிரம் காட்டி வருகின்றனா்.

குறிப்பாக, ‘கேரள பாதுகாப்பு பிரிகேட்’ என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் வழக்குரைஞா் ரசூல் ஜோய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த வழக்கை ஆதரித்துக் கேரள அரசும் வழக்கில் இணைந்து வாதிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசின் வழக்குரைஞா்கள் வாதிட்டாா்களா? என்பது தெரியவில்லை. இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் உள்ள கட்சிகள், முல்லைப் பெரியாறு அணையை இடித்து தகா்த்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றன. ஏற்கெனவே பாலாறு, தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளை இழந்து விட்டோம். காவிரியில் பாதி உரிமையை இழந்து நிற்கிறோம். எனவே, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் கருத்துக்கும், கட்டளைக்கும் சட்டத் தடுப்புகள் போட சட்டரீதியாக போராட்டத்தை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com