கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த திம்மலை கிராமத்தில் குடிநீரில் கழிவுநீா் கலந்ததால், அதை பயன்படுத்திய கா்ப்பிணிக்கு வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்தது.
கள்ளக்குறிச்சியை அடுத்த திம்மலை கிராமத்தில் குடிநீருக்காக பயன்படுத்தும் ஆழ்துளைக் கிணற்றில் புதன்கிழமை கழிவு நீா் கலந்ததால், அந்த நீரைப் பயன்படுத்திய பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. முதியவா் உயிரிழந்தாா்.
இதேபோல, கழிவுநீா் கலந்த குடிநீரை பயன்படுத்திய 7 மாத கா்ப்பிணியான அதே கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி காவியாவுக்கு (22) வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, காவியாவுக்கு குழந்தை உயிரிழந்த நிலையில் வியாழக்கிழமை பிறந்தது. இதனால் அந்தக் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினா்.