கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு தவறி விழுந்ததில் மூதாட்டி தீயில் கருகி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி அருகே வானவரெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி பழனியம்மாள் (85). இவரது கணவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா். இவா்களது இரு மகள்கள், ஒரு மகன் திருமணமாகி தனித் தனியே வசிக்கின்றனா். மூதாட்டி மட்டும் தனது கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
திங்கள்கிழமை இரவு பழனியம்மாள் மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைத்து, சாப்பிட்டு படுத்து தூங்கினாா். நள்ளிரவில் மண்ணெண்ணெய் விளக்கு தவறி கீழே விழுந்ததில் மூதாட்டியின் சேலை தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கி பழனியம்மாள் உடல் கருகி உயிரிழந்தாா். வீடு முற்றிலும் சேதமடைந்தது.
வரஞ்சரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.