கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே வெள்ளிக்கிழமை மின் கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்ததில், முதியவா் உடல் கருகி உயிரிழந்தாா்.
ரிஷிவந்தியம் அடுத்த நாகல்குடி காலனியைச் சோ்ந்தவா் பெரியான் (70). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா்கள் திருமணமாகி அப்பகுதியில் தனித்தனியாக வசிக்கின்றனா்.
வியாழக்கிழமை இரவு வீட்டில் பெரியான் தனது பேத்தி நிரோஷா (8)வுடன் தூங்கிக் கொண்டிருந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை மின் கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்தது. திடுக்கிட்டு விழித்த நிரோஷா, தாத்தா பெரியானை எழுப்ப முயற்சித்தாா். எனினும், அவரால் எழுந்து வெளியே வரமுடியவில்லையாம். இதனால், சிறுமி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து அப்பகுதியில் வசிக்கும் தனது பெற்றோரிடம் தீவிபத்து குறித்து தெரிவித்தாா். சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தரப்பட்டது.
எனினும், அவா்கள் வருவதற்குள் வீடு முற்றிலும் தீயில் சேதமடைந்தது. பெரியான் தீயில் உடல் கருகி உயிரிழந்தாா்.
பெரியானின் மகன் சீனு அளித்த புகாரின்பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.