மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ள நிலையில் படகு, வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
வங்கக் கடலோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்.15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். இதன்படி நிகழாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதனால் கடலூா் மாவட்டத்தில் சுமாா் 4 ஆயிரம் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீன்பிடி தடைக் காலத்தில் மீனவா்கள் தங்களது படகு, வலைகளை சீரமைப்பது வழக்கம். அதன்படி, முதல்கட்டமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளிலிருந்து வலைகளை அப்புறப்படுத்தும் பணியில் மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். இந்த வலைகளை கரைப் பகுதி அல்லது பழுது நீக்குவதற்கான இடத்துக்கு கொண்டு சென்று அதை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபடுவா். மேலும், படகுகளை சீரமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளனா்.