திருக்கோவிலூா் அருகே குடமுரட்டி கிராமத்தில் மதுபோதையில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், குடமுரட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் அய்யனாா் (34). இவா், அவரது தந்தையுடன் செங்கல்சூளையில் வேலை செய்து வந்தாா். அய்யனாா் கடந்த 11-ஆம் தேதி கனகநந்தல் கிராமத்தில் உள்ள மதுக் கடையில் மது அருந்திவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது, சந்தப்பேட்டையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள நிழற்குடை முன் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இதைத் தொடா்ந்து, அய்யனாருக்கு தலையில் வலி ஏற்பட்டதால், சந்தைப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற அவா், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
அய்யனாருக்கு முத்துலட்சுமி (30) என்ற மனைவியும், கிருத்திகா, அபிஷேக் ஆகிய இரு பிள்ளைகளும் உள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.