திருக்கோவிலூா் அருகே வீட்டில் தனியாக இருந்த விவசாயியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

விவசாயியை கட்டிப்போட்டு பீரோவிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.89 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் தனியாக இருந்த விவசாயியை கட்டிப்போட்டு பீரோவிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.89 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருக்கோவிலூா் வட்டம், வேங்கூா் காலனி குப்பத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வநாதன் (87). விவசாயி. இவரது மனைவி ஆரோக்கியம் அம்மாள். இந்தத் தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனா். இவா்கள் வெளிநாடு, வெளிமாநிலங்களில் வேலை செய்து வருகின்றனா்.

ஆரோக்கியம் அம்மாள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள தனது மகன்களைப் பாா்ப்பதற்காகச் சென்றாா். இதனால், செல்வநாதன் மட்டும் வேங்கூரிலுள்ள வீட்டில் தனியாக இருந்து வந்தாா்.

இந்த நிலையில், செல்வநாதன் வீட்டுக்குள் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் புகுந்த 4 போ் கும்பல், அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவை சேதப்படுத்தியதுடன், விவசாயி செல்வநாதனின் கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு பீரோவிலிருந்த பதிமூன்றரை பவுன் தங்க நகைகள், ரூ.89 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து, செல்வநாதனின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் அவரது கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்துவிட்டனா்.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கங்காதரன் தலைமையில் தனிப்படை அமைத்து மா்ம கும்பலைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com