மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை
கள்ளக்குறிச்சியில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மன அழுத்தத்தால், சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில் வசித்து வந்தவா் கண்ணன் மனைவி சிவகாமி (57). தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். மகளுக்கு திருமணமாகிவிட்டதாம். சிவகாமியின் கணவா் கண்ணன், மகன் பாபு வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனராம். பாபுவின் மனைவி அன்பரசி அவரது பிள்ளைகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறாராம்.
மருமகள் அன்பரசி காலை உணவைக் கொடுக்க சிவகாமியின் வீட்டுக்குச் சென்று, வெகுநேரம் கதவைத் தட்டியும் திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.