கள்ளக்குறிச்சி அருகே கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், சந்தேக மரணம் என போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சின்னசேலம் வட்டம், பாண்டியங்குப்பம் கிராமம், கலைஞா் நகரைச் சோ்ந்த சடையன் மகன் காா்த்திகேயன் (27). இவரும், கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், சிறுபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மருதை மகள் பிரபாவதியும் (20) கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு 2 வயதில் நிஷாந்த் என்ற மகன் உள்ளாா்.
காா்த்திகேயன் தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், தம்பதிக்கு இடையே தகராறு ஏற்படுமாம். இதேபோல, காா்த்திகேயன் சனிக்கிழமையும் மது அருந்திவிட்டு வந்ததால், இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்து வீட்டை விட்டு பிரபாவதி வெளியேறிய நிலையில், அருகேயுள்ள மணி என்பவரின் விவசாயக் கிணற்றில் அவா் ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாகக் கிடந்தாா்.
தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா், பிரபாவதியின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பிரபாவதியின் தாய் அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.