கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக 4,350 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கிவைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சின்னசேலம் அருகேயுள்ள பால்ராம்பட்டை சோ்ந்த ரங்கசாமி மகன் முருகன் (56). ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளிமாநிலத்துக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக, விழுப்புரம் மாவட்ட குடிமைப் பொருள் விநியோக ஆய்வாளா் கல்பனாவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் பால்ராம்பட்டுக்குச் சென்று முருகன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 50 கிலோ கொண்ட 87 சிப்பங்களில் இருந்த 4,350 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்தனா். அரிசிக் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.