கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் சான்று பெறுவதற்காக புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 4,738 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிறு குறு விவசாயிகள் சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
பாரதப் பிரதமா் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், மானிய முறையில் சொட்டு நீா்ப்பாசனம் அமைப்பதற்காக சிறு குறு விவசாயிகளுக்கு நிகழாண்டு சான்று வழங்க ஏதுவாக கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் (பொ) சரவணன் தலைமை வகித்து விண்ணப்பங்களை பெற்றாா்.
இதில் கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் பிரபாகரன், வேளாண்மைத்துறை அலுவலா் விஜயராகவன், வருவாய் ஆய்வாளா் ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.