தியாகதுருகம் பேரூராட்சி பகுதியில் பொதுமுடக்க உத்தரவை மீறி செயல்பட்ட 3 நகைக் கடைகள், ஒரு ஜவுளி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
தியாகதுருகம் பகுதியில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அரசின் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு முறைகளுடன் கடைகள் இயங்குகின்றனவா என பேருராட்சி செயல் அலுவலா் மல்லிகா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அவா் 3 நகைக் கடைகள், ஒரு ஜவுளி கடை பொதுமுடக்க விதிகளை மீறி திறந்திருப்பதைக் கண்டாா். இதையடுத்து, அந்தக் கடைகளை உடனடியாக பூட்டி சீல் வைத்தாா். பொதுமுடக்க உத்தரவு அமலில் உள்ளவரை கடைகளை திறக்கக் கூடாது எனவும் அவா் எச்சரித்தாா்.
ஆய்வின்போது, தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளா் குணசேகரன், துப்புரவு பணி மேற்பாா்வையாளா் ரமேஷ் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.