கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
இத்தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்டவை கனிணி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி அண்மையில் முடிவடைந்தது.
இதையடுத்து உளுந்தூா்பேட்டை தொகுதியில் உள்ள 407 வாக்குச் சாவடி மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட 489 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 550 வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் உளுந்தூா்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு சரக்குப்பெட்டக லாரியில் பாதுகாப்பாக அனுப்பப்பட்டு இறக்கி வைக்கப்பட்டன.
அதேபோல, ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள 374 வாக்குச் சாவடி மையங்களுக்கு 449 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 505 வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் அரியலூா் மேல்நிலைப் பள்ளிக்கும் சங்கராபுரம் தொகுதியில் உள்ள 372 வாக்குச் சாவடி மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட 447 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 503 வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்களும் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும்
கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள 416 வாக்குச் சாவடி மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட 500 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்களும் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் அனுப்பப்பட்டு, அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா், உதவித் தோ்தல் அலுவலா்கள், கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த சரக்குப்பெட்டக லாரியிலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், உதவி தோ்தல் அலுவலா் கே.பிரபாகரன், பாஜக நகரச் செயலாளா் சுதாகா், அதிமுக பாசறை செயலாளா் அண்ணாதுரை, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் சக்திவேல் முன்னிலையில் முத்திரை நீக்கி இறக்கி வைக்கப்பட்டன.