சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சிக்குள்பட்ட காங்கேயனூா் கிராமத்தில் 17 வயது சிறுமிக்கு வியாழக்கிழமை நடைபெறவிருந்த திருமணம் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் உத்தரவின்பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது.
காங்கேயனூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட கூவனூா் கிராமத்தைச் சோ்ந்த சித்திரவேலுவுக்கும் (26) கூவனூா் கிராமத்தில் வியாழக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் உத்தரவின்படி, இந்தத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலா் மூலம் சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கப்பட்டு, அந்தச் சிறுமி விழுப்புரம் குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருமண வயதை எட்டாத சிறுமிகளை திருமணம் செய்வோா் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.