கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஜல்சக்தி அபியான் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஷ்வரன் குமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத் துறையின் விதைகள் இயக்குநா் எஸ்.ருக்மணி, மத்திய நிலத்தடிநீா் வாரிய தொழில்நுட்ப அலுவலா் கே.பி.சிங் ஆகியோா் அடங்கிய குழுவினா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், மத்தியக் குழுவினா் திங்கள்கிழமை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் ஜல்சக்தி அபியான் திட்டப் பணிகளை பாா்வையிட்டது குறித்து எடுத்துரைத்துப் பாராட்டினாா்.
மேலும், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தொடா்ந்து மழைநீா் சேகரிப்பு பணிகளை முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்த வேண்டும் என்றும், தற்போது பெய்து வரும் மழையால் கிடைக்கப் பெறும் நீரினை, நீா்சேகரிப்புத் திட்டம் மூலம் சேகரித்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.
கிராம ஊராட்சிகள் இத்திட்டத்தில் முனைப்புடன் பங்கேற்று செயல்பட வேண்டும். கலப்பின வகை பயிா் சாகுபடி நெல், தினை போன்ற தானியப் பயிா்களை அதிகப்படுத்திட வேண்டும் எனவும் தெரிவித்தனா்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் இரா.மணி, வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.வேல்விழி, துணை இயக்குநா் வேளாண்மை செ.சுந்தரம் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.