பண்ருட்டி நகா்மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
பண்ருட்டி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் கே.ராஜேந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையா் மகேஸ்வரி, பொறியாளா் சிவசங்கரன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் மோகன் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் தெரு விளக்குகள் பராமரிப்பில் பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஊழல் எந்த ஆட்சியில் நடந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். தொடா்ந்துப் பேசிய உறுப்பினா்கள் ப.சண்முகவள்ளி, வெங்கடேசன், ஆா்.கே.ராமலிங்கம், ஆனந்தி சரவணன், முருகன் ஆகியோா் தங்களது வாா்டு பகுதிகளில் சாலை, தெரு விளக்கு, வடிகால் வசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா்.
இதனிடையே, கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை எதிா்த்தும், உயிரிழந்த முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்களுக்கு அஞ்சலி தீா்மானம் நிறைவேற்றாததைக் கண்டிப்பதாகக் கூறியும் மோகன் தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.