கள்ளக்குறிச்சி நகரில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஷவா்மா உணவகத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுத்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதரின் உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் எஸ்.சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் எஸ்.கதிரவன் உள்ளிட்டோா் கள்ளக்குறிச்சி நகருக்குள்பட்ட 6 ஷவா்மா உணவகங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அந்த உணவகங்களில் சாலையோரத்தில் திறந்த நிலையில், தூசி படிந்தும், அதிகளவில் செயற்கை வா்ணம் பூசப்பட்டும் இருந்த 9 கிலோ இறைச்சியையும், உண்ணத்தகாத வகையில் இருந்த சுமாா் 3 கிலோ பிரியாணியையும் கைப்பற்றி அழித்தனா்.
இது தொடா்பாக 5 உணவகங்களின் உரிமையாளா்களுக்கும் நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனா். மேலும், ஒரு உணவகத்துக்கு ரூ.2,000 அபராதம் விதித்தனா்.