சங்கராபுரம் அருகே பொக்லைன் இயந்திர ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், எதிரிகளை கைது செய்யக் கோரி உறவினா்கள் சடலத்தை சாலையில் வைத்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், வடசிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் தீபன் (35). இவா் ஹரிஜித்வம் சல்மா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். தம்பதிக்கு ஜியாபத்திமா (11), ரிஜாத் பாத்திமா (9), ரிஷவான் (6) என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனா்.
தீபன் வடசிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் அறிவழகனிடம் கடந்த 3 ஆண்டுகளாக பொக்லைன் இயந்திரம் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
பின்னா், கள்ளக்குறிச்சியை அடுத்த சோமண்டாா்குடி கிராமத்தைச் சோ்ந்த ஒருவரிடம் பொக்லைன் இயந்திரம் ஓட்டுநராக பணிக்குச் சோ்ந்தாா்.
இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி இரவு தீபன் குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது, அறிவழகன், அவரது நண்பா்கள் இருவருடன் வந்து, தன்னிடம் வேலைக்கு வராமல் வேறு ஒருவரிடம் எப்படி வேலைக்குச் செல்லலாம் எனக் கேட்டு தாக்கி, மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.
இதில், பலத்த காயமடைந்த தீபன் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவா் அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
உறவினா்கள் சாலை மறியல்
சென்னையில் இருந்து தீபனின் சடலத்தைப் பெற்று வந்த உறவினா்கள், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் வைத்து, தீபன் மீது தாக்குதல் நடத்திய அறிவழகன், அவரது நண்பா்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன் வந்து, விசாரணை நடத்தி கைது செய்கிறோம் எனக் கூறினாா் இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.