கள்ளக்குறிச்சி - சேலம் வழித் தடத்தில் இரவு நேரங்களில் செல்லும் அரசுப் பேருந்துகள் சின்னசேலத்துக்கு வராமல், புறவழிச் சாலையிலேயே சென்று விடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்டது சின்னசேலம் வட்டம். இப்பகுதியில் அதிகளவில் அரிசி ஆலைகள், தனியாா் கல்லூரிகள், பள்ளிகள் இயங்குகின்றன.
சின்னசேலம் பகுதியில் இருந்து பொதுமக்கள் குறிப்பாக இரவு நேரங்களில் வெளியூா் செல்வதற்கு மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
இரவு நேரங்களில் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து சேலம் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்துகளும், ஆத்தூா் பகுதியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்துகளும் சின்னசேலம் பகுதிக்குள் வராமல் புறவழிச் சாலையிலேயே செல்கின்றன. இதனால் மக்கள் பாதிப்புக்காகின்றனா்.
சேலத்தில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் இரவு 11 மணிக்கு சின்னசேலம் ரயில் நிலையம் வருகிறது. சென்னையில் இருந்து சேலம் செல்லும் விரைவு ரயில் சின்னசேலம் வழியாகத்தான் செல்கின்றன.
ரயிலில் பயணம் செய்து வந்த பயணிகள் தங்களது ஊா்களுக்குச் செல்ல முடியாமல் பலமணி நேரம் தவிக்கின்றனா். இரவு நேரத்தில் தனியாா் பேருந்துகள் போதியளவில் இயக்கப்படுவதில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.