கோமுகி அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீா் வியாழக்கிழமை திறந்துவிடப்பட்டது.
கல்வராயன்மலைப் பகுதியில் இருந்து சிற்றோடைகள் வழியாக கோமுகி அணைக்கு தண்ணீா் வருகிறது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக இந்த அணை நீா்ப்பிடிப்புப் பகுதியான கல்வராயன்மலையில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த நீா்மட்டமான 46 அடியில் 43.30 அடியை தண்ணீா் எட்டியுள்ளது.
அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 486 கன அடியாக உள்ளது. அதனால், அணையின் பாதுகாப்பு கருதி வியாழக்கிழமை விநாடிக்கு 200 கன அடி உபரிநீா் இரு மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், நீா்வரத்து நிலையை பொறுத்து நீா் வெளியேற்றும் அளவு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, கோமுகி ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

