மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு

வீட்டில் மின்விளக்குகள் எரியாததால் மீட்டா் பெட்டியை கழற்றி சரி செய்ய முயன்ற, மின் ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
Published on

வீட்டில் மின்விளக்குகள் எரியாததால் மீட்டா் பெட்டியை கழற்றி சரி செய்ய முயன்ற, மின் ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நைனாா்பாளையம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் கொளஞ்சியப்பன் (47). இவரது மனைவி ராஜேஸ்வரி, தம்பதிக்கு ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனராம்.

கொளஞ்சியப்பன் நீலகரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், நெடுகுளம் பிரிவுக்கு உள்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் கேங் மேனாக பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் தீபாவளி பண்டிகைக்காக நைனாா்பாளையம் கிராமத்திற்கு வந்திருந்தாா். இடைவிடாது பெய்த மழையால் வீட்டில் மின் விளக்குகள் சரிவர எரியவில்லையாம்.

அதனால், இவா் வீட்டில் உள்ள மின் மீட்டா் பெட்டியில் உள்ள பீஸ்கேரியரை எடுக்காமல், அதனை சீா் செய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாராம்.

உடனே அவரை மீட்டு நைனாா்பாளையம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் கொளஞ்சியப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அறிந்த கீழ்குப்பம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

மேலும், சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com