அரசு உணவக மேலாண்மை மற்றும் சமையல் தொழில்நுட்ப நிறுவனத்தில் புதுவையைச் சேர்ந்தவர்களுக்கு 25 % இட ஒதுக்கீடு பெற்றுத் தரப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
முருங்கப்பாக்கத்தில் உள்ள அந்நிறுவனத்தின் வெள்ளி விழா மற்றும் முன்னாள் மாணவர் சங்கத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதல்வர் நாராயணசாமி பேசியது: புதுவை மாநிலத்தில் சுற்றுலாத் துறையில் நிறைய வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். கோவா மாநிலத்தில் சுற்றுலாத் துறை மூலம் அதிக வருவாய் ஈட்டப்படுகிறது. ஆனால், புதுச்சேரியில் அந்த அளவுக்கு வருவாயை ஈட்ட முடியவில்லை. இது குறித்து சுற்றுலாத்துறையினர் சிந்திக்க வேண்டும்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த ரூ. 750 கோடி நிதியை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.
சுற்றுலாத் துறையை வளர்க்க தனியார் பங்களிப்பும் அவசியமாகும். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து பல நிறுவனங்கள் இதற்காக உதவ முன் வந்துள்ளனர்.
புதுவையில் உணவக மேலாண்மை, சேவைத் துறை
15 முதல் 20 % வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலமாகத்தான் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.
புதுவையில் சிறிய அளவில் விமான சேவையைத் தொடங்க மத்திய அரசு நிதி அளிப்பதாகக் கூறியுள்ளது. விமான நிலையத்தின் ஓடு பாதையை விரிவாக்க நிலம் தேவை. எனவே அருகில் உள்ள தமிழக நிலத்தைப் பெற தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச உள்ளேன்.
இன்னும் 2 மாதத்துக்குள் மத்திய அரசின் அனுமதி பெற்று கோவை, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு சிறிய விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு உணவக மேலாண்மை நிறுவனத்தில் புதுவையைச் சேர்ந்தவர்களுக்கு 25 % இடங்களைப் பெற மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.