புதுவை ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தாய்ப்பால் புகட்டும் அறை சனிக்கிழமை திறக்கப்பட்டது.
புதுவை எல்லைப்பிள்ளைசாவடி பகுதியில் ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமான பெண்கள் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நோய் தொடர்பாக வந்து செல்கின்றனர்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்ட ஏற்கெனவே தாய்ப்பால் புகட்டும் அறை உள்ளது.
இதனை மருத்துவமனை பணியாளர்களும், வெளி நோயாளிகளும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, மருத்துவமனையில் புதிய தாய்ப்பால் புகட்டும் அறை சனிக்கிழமை திறக்கப்பட்டது. பல்வேறு வசதிகளுடன் திறக்கப்பட்ட இந்த அறையை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் சுஜாதா திறந்து வைத்தார். அப்போது, மருத்துவமனையின் உள்ளிருப்பு அதிகாரி நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த புதிய அறையை வெளி நோயாளிகள், பரிசோதனைக்கு வரும் தாய்மார்கள், மருத்துவமனை பெண் ஊழியர்கள் பயன்படுத்தலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.