மதுக் கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறைக்கு மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சோரியாங்குப்பம் கிராமத்தில் புற்றீசல் போல முளைத்து வரும் மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரியிருந்தனர். மக்களின் நியாயமான கோரிக்கை மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக் கடைகளுக்கு எதிராக மக்கள் போராடும் போது அவர்கள் மீது தடியடி நடத்தவோ, கைது செய்யவோ கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. இதனை மீறி போலீஸார் போராடிய மக்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
மதுக் கடைகள் விவகாரத்தில் அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழிகாட்டும் குழு ஒன்றை அமைத்து சுமூகமாக தீர்வு காண வேண்டும். அதை விடுத்து போராடும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் தடியடி நடத்துவது என்பது வன்முறையில் தான் முடியும். துணைநிலை ஆளுநர், முதல்வர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.