மனைகளை விற்க முடியாததைக் கண்டித்து, புதுச்சேரி நகர திட்ட குழும அலுவலகத்தை மக்கள் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றம் புதுச்சேரியில் அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள் மற்றும் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தடை விதித்தது.
மேலும், மத்திய அரசு சட்டப்படி நில வணிக வரன் முறைபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் சட்டம் 2017ஐ புதுவை அரசு கொண்டு வந்துள்ளது.
இக்காரணங்களால் சாதாரண மக்கள் தங்களது சிறு மனைகள், நிலங்களைக் கூட விற்பனை செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் முன்னர் விற்று கிரயம் பெற்ற சொத்து உள்ளிட்ட மனைகளை மறுகிரயம் செய்து கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மறுகிரயம், அடமானம், போக்கியம், தானம், பரிவர்த்தனை, உயில் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகிறது.
இதனை புதுவையில் நடைமுறைப்படுத்தவில்லை. நீதிமன்ற தடையும் நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சாதாரண மக்கள் தங்களது நிலத்தை அடமானம் கூட வைக்க முடியாமல் அல்லப்பட்டு வருகின்றனர்.
எனவே, புதுவை வருவாய்த் துறை, பத்திர பதிவுத் துறை, நகர திட்ட குழுமம் மற்றும் உள்ளாட்சித் துறை ஆகிய இணைந்து பத்திரப் பதிவு செய்வதற்கு ஏதுவாக ஒரு மேம்பாட்டு கட்டணங்களை வரையறுத்து,
அதன் மூலம் பத்திரப்பதிவு செய்ய தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் புதுவை நகர திட்ட குழும அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் ஜெகநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் நகர திட்ட குழுமத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ரெட்டியார்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது என எச்சரித்தனர். பின்னர், தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை நகர திட்ட குழும முதுநிலை அதிகாரி ஸ்ரீதரனிடம் அளித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.