காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முக்கிய எதிரியை காவலில் எடுத்து விசாரிக்க புதுச்சேரி நீதிமன்றத்தில் போலீஸார் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாறன். காங்கிரஸ் பிரமுகரான இவர், கடந்த மார்ச் 6-ஆம் தேதி செஞ்சி சாலையில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பெரிக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மூர்த்தி உள்பட 11 பேரை கைது செய்தனர்.
இதில் தலைமறைவாக உள்ள மூர்த்தியின் மனைவி திலகா, கன்னுக்குட்டி கணேஷ், வினோத் ஆகியோரை தேடி வந்தனர். இதற்கிடையே கடந்த வாரம் விழுப்புரம் நீதிமன்றத்தில் கன்னுக்குட்டி கணேஷ் சரணடைந்தார். அதையடுத்து அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் கன்னுக்குட்டி கணேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர். இதற்காக, புதுச்சேரி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர்.