மத்திய அரசின் திட்டங்களுக்கு முதல்வர் முட்டுக்கட்டை 

மத்திய அரசின் திட்டங்களை, புதுவை மாநிலத்தில் அமல்படுத்த மாநில முதல்வர் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார்

மத்திய அரசின் திட்டங்களை, புதுவை மாநிலத்தில் அமல்படுத்த மாநில முதல்வர் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். இதைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்துவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் தெரிவித்தார்.
 இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
 புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் மத்திய அரசு ஜிஎஸ்டியாக 25 சதவீதம் வரி வசூலித்து வரும் நிலையில், மாநில அரசு 28 சதவீதம் வரி வசூலித்து வருகிறது. இதைக் கண்டித்து கடந்த மாதம் மார்ச் 16-ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
 தமிழகத்தில் திரையரங்குகளில் 8 சதவீதம் மட்டுமே மாநில அரசு வசூலிக்கிறது. அதையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூடப்பட்ட திரையரங்குகளால் நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் என இதுவரை ஒரு கோடிக்கு ரூபாய்க்கு மேல் அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 மேலும், அந்தத் திரையரங்குகளில் வேலை செய்யும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே திரையரங்குகளை திறக்க ஆளுநரும், தலைமைச் செயலரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் பெயர் கிடைத்துவிடும் என்பதற்காக முதல்வர் நாராயணசாமியும், அமைச்சர் கந்தசாமியும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை இரட்டடிப்பு செய்து வருகின்றனர்.
 உஜ்வாலா பஞ்சாயத்து என்ற திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு உருளை இருக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 1-ஆம் தேதி முதல் மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்துவதுபோல, அமைச்சர் கந்தசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்கான விண்ணப்பங்களில் கூட பிரதமர் மோடியின் படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
 விண்ணப்பங்களில் பிரதமர் மோடியின் படம் புதன்கிழமைக்குள் இடம் பெற வேண்டும். இல்லையென்றால் கேஸ் முகமை நிறுவனங்கள் முன் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
 மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் மோடி கேர் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இணைந்தால் ரூ.5 லட்சத்துக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
 திட்டத்தில் பயனாளிகள் பட்டியலை கொடுப்பதற்கு வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். ஆனால், புதுச்சேரியில் இருந்து இதுவரை பயனாளிகள் யாரையும் தேர்வு செய்ததுபோல தெரியவில்லை என்றார் அவர்.
 பேட்டியின்போது மாநில துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம், பொருளாளர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com