மாசுபடிந்த குடிநீர் விநியோகத்தை கண்டித்து பொதுப்பணித் துறை அலுவலகம் முன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்கு உள்பட்ட சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் குடிநீர் மாசடைந்து உப்புத் தன்மையுடன் உள்ளதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தேர்தல் சமயத்தில் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டும், இதுவரை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் சார்பில் பொதுப்பணித் துறை அதிகாரிகளை கண்டித்து மாசடைந்த குடிநீரை அதிகாரிகளுக்கு வழங்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சங்கச் செயலாளர் பிரளயன் (எ) லெனின் தலைமையில் கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே திரண்ட பொதுமக்கள் தள்ளுவண்டியில் தண்ணீர் பாட்டில்களை வைத்து அதற்கு மாலை போட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
கிழக்குக் கடற்கரைச் சாலை பொதுப்பணித் துறை அலுவலகம் வந்த அவர்கள் அங்கு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் மணி, செயலாளர் மாதவன், பொருளாளர் ஹரிசந்திரன், துணைத் தலைவர் திலீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுசி கம்யூனிஸ்ட் புதுவை மாநிலச் செயலாளர் லெனின்துரை, ஏஐடியூசி மாநிலச் செயலாளர் முத்து, புதுச்சேரி கலை, இலக்கிய, பண்பாட்டுப் பேரவை கலைவரதன், நாகராஜன், ஜெயமுருகன், ரவி, சுதாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.