ஜூலை 12 -இல் போராட்டம்: விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு
By DIN | Published on : 30th June 2018 09:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டப்பணியை முழுமையாக வழங்க வலியுறுத்தி, வரும் ஜூலை 12-ஆம் தேதி போராட்டம் நடத்த விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க காரைக்கால் மாவட்டக் குழு கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஏ.முகம்மது யூசுப் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற கூலித் தொழிலாளர்கள் வேலை தேடி அண்டை மாவட்டங்களுக்கும் செல்லும் அவலம் தொடர்கிறது. இதனால் கிராம மக்களிடையே வறுமை தாண்டவமாடுகிறது. இதனை போக்கக்கூடிய 100 நாள் வேலை உறுதித் திட்டப்பணி காரைக்கால் மாவட்டத்தில் முழுமையாக நடைபெறவில்லை. சில நாள்கள் மட்டுமே நடைபெற்று பின்னர் நிறுத்தப்பட்டுவிடுகிறது. நாள் கூலி ரூ.224 தரவேண்டும் என்பதையும் இதுவரை தொழிலாளர்களுக்குத் தரவில்லை.
100 நாள் வேலையை அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் முழுமையாக தரவேண்டும். பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வார இறுதியில் ஊதியம் தருவதை உறுதி செய்யவேண்டும்.
வேலையில்லா காலங்களில் அரசு நிவாரணம் தரும் முடிவை எடுத்து செயல்படுத்தவேண்டும். இதன் மீது கவனம் செலுத்தாத புதுச்சேரி அரசைக் கண்டித்து வரும் ஜூலை 12-ஆம் தேதி காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக விவசாயத் தொழிலாளர்கள் திரளானோர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
கூட்டத்தில் புதுச்சேரி மாநில தலைவர் எஸ்.உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட், காரைக்கால் வட்ட செயலர்
எஸ்.எம்.தமீம், தொழிலாளர் சங்க மாநில பொருளாளர்
என்.எம்.கலியபெருமாள், காரைக்கால் மாவட்ட செயலர் திவ்யநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜெயராமன், ராதாகிருஷ்ணன், கவிதா, மகாராணி, பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.