பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வைக் கண்டித்து, புதுச்சேரியில் மாணவர் காங்கிரஸ் சார்பில் மிதிவண்டி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர்கள் விக்கிரமாதித்தன், ரவீந்திரன், இந்திரஜித், பொதுச் செயலர்கள் புருஷோத், ஹரீஸ், செயலாளர்கள் கவுதம், கார்த்திக், மாவட்டத் தலைவர் ஆனந்தவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் பேரணியை முதல்வர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.
பேரணியில், மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொண்டு வந்தனர். இந்த பேரணி நெல்லித்தோப்பு, இந்திரா காந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, காமராஜர் சாலை, ராஜா திரையரங்கு சந்திப்பு, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக தலைமை அஞ்சல் நிலையத்தை அடைந்தது.
அங்கு மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோலியப் பொருள்கள் விலையை குறைக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம், அமைச்சர் மு.கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.